A+ A-

"நிதானமே பிரதானம்..."-சிறுகதை

"நிதானமே பிரதானம்..."-சிறுகதை

ஒரு மரத்தின் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்ட ஒரு இளைஞன், பசியார்வத்தில் மரத்தின் மேல் சரசரவென்று ஏறிவிட்டான்...

 அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான்...

 மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன...

 அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது, அவனது பாரம் தாங்காமல் கிளை முறிந்து விட்டது. சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டான்...

 தொங்கியபடி குனிந்து பார்த்தால்...

 தரை வெகு கீழே இருந்தது...

 பயத்தில் கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து, கை வழுக்க ஆரம்பித்தது...

 அப்போது அந்தப் பக்கம் வந்த ஒரு முதியவர் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். குசும்புடன், அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல்லடி பட்டவுடன் அவனுக்கு ஆத்திரம் வந்தது.

"பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு?" என்று கோபத்துடன் கேட்டான்.

 பெரியவர் பதில் பேசாமல், நக்கலாக சிரித்தபடி மேலும் மற்றொரு கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார்.

 இளைஞன் மேலும் கோபமுற்றான்.


பெருமுயற்சி எடுத்து, மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான்.

 பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார்...

 இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான்.

 அவரை சரமாரியாகத் திட்டினான். "ஏன் அப்படிச் செய்தீர்?

 உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான்.

 பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார்.

இளைஞன் திருதிருவென முழித்தான். பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய்...

உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து, நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய்...

 உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது.

 அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போக... இளைஞன் சிந்திக்க ஆரம்பித்தான்...!

 இளைஞனின் பதட்டமும், பயமும் அவனை முட்டாளாக்கி விட்டது...!

 பெரியவரின் நிதானமும்...

 சமயோசித புத்தியும் தான்...

 இளைஞனின் கோபம் என்கிற விஷத்தையே அவனை காப்பாற்றும் மருந்தாக மாற்றியது...

 ஆகவே, "நிதானமே பிரதானம்..."
 'நிதானமான மனநிலையில் தான் அறிவுத்திறன் நன்றாக இருக்கும்...' என்பதை புரிந்து கொண்டுடால் இந்த நாள் மட்டுமல்ல... எந்த நாளும் இனிய நாள் தான்...

"நிதானமே பிரதானம்..." 'நிதானமான மனநிலையில் தான் அறிவுத்திறன் நன்றாக இருக்கும்...' என்பதை புரிந்து கொண்டுடால் இந்த நாள் மட்டுமல்ல... எந்த நாளும் இனிய நாள் தான்...