A+ A-

ஹிட்லரே தமிழனிடம் மன்னிப்பு கேட்ட வரலாறு .......

ஹிட்லரே தமிழனிடம்  மன்னிப்பு கேட்ட வரலாறு .......

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது 'ஜெய் ஹிந்த்' என்ற ஒற்றை வாசகம்தான், தாய்நாட்டின் மீது பற்றும் பாசமும் கொண்ட ஒவ்வொரு இந்தியரின் பேச்சிலும், மூச்சிலும் உறைந்துப் போய் இருந்தது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.



ஆனால், இந்த அற்புத வாசகத்தை உருவாக்கி, மக்களிடையே பரவச் செய்து, விடுதலைக்கான வீரத் தீப்பொறியை பரவச் செய்தவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என்ற நம்பிக்கையும் இந்திய மக்களின் கருத்தில் விதைக்கப்பட்டது.


இந்த தகவலுக்கு மாறாக, 'ஜெய் ஹிந்த்' என்ற வாசகத்தை முதலில் அறிவித்து பிரகடணப்படுத்தியவர் ஒரு தமிழர் தான் என்ற அரிய செய்தியும், அந்த வீரத் தமிழனிடம் உலகையே ஆட்டிப் படைத்த சர்வாதிகாரியான ஹிட்லர் மன்னிப்பு கேட்ட பெருமைக்குரிய வரலாறும் தற்போது தெரிய வந்துள்ளது.

'ஜெய் ஹிந்த் செண்பகராமன்' என்ற நூலினை வரலாற்று ஆசிரியர் 'ரகமி' என்பவர் எழுதியுள்ளார். இந்த நூலில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் இருட்டடிப்பு செய்யப்பட்ட அந்த பெருமைக்குரிய தமிழனின் பெரும்பங்கு ஆதாரத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குமரியில் பிறந்த செண்பகராமன் சில காலத்திற்கு பின் திருவனந்தபுரத்தில் பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறார். மாணவராக இருந்த காலங்களிலேயே இந்திய விடுதலைக்காக பல்வேறு போராட்டங்களில் செண்பகராமன் ஈடுபட்டார்.

இந்தியாவில் தங்கியிருந்த ஜெர்மனி நாட்டு உளவாளியான 'சேர் வால்டர் வில்லியம் ஸ்ரிக்லாண்ட்', செண்பகராமனின் நடவடிக்கைகளில் இருந்த உறுதியான கொள்கைப்பிடிப்பையும், துணிச்சலையும், ஆர்வத்தையும் கண்டு பலவகைகளில் அவருக்கு உதவி செய்தார்.

அவரது உதவியுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய செண்பகராமன் இத்தாலி, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் வாழ்ந்திருக்கிறார். இத்தாலியில் இருந்த போது இத்தாலிய இலக்கியம், விஞ்ஞானம் போன்றவற்றை படித்தார். பின்னர், சுவிட்சர்லாந்திலும் படிப்பை தொடர்ந்திருக்கிறார். அதன்பின் ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் பொறியியல் துறையின் டாக்டர் பட்டம் பெற்றார்.

பட்டப்படிப்புக்கு பிறகு, ஜெர்மனியில் தங்கியிருந்தபடியே இந்திய ஆதரவு சர்வதேசக் கமிட்டி மூலம் இந்திய விடுதலைக்கு செண்பகராமன் ஆதரவு திரட்டத் தொடங்கினார். அந்த காலக்கட்டத்தில் ஜெர்மனி மன்னர் கெய்சரின் நட்பு அவருக்கு கிடைத்தது. 1930-இல் இந்திய வர்த்தக சபை சமாஜத்தின் பெர்லின் பிரதிநிதியாக செண்பகராமன் நியமிக்கப்பட்டார்.

1933-இல் ஜெர்மனியில் ஹிட்லரின் ஆட்சி ஏற்பட்ட போது அவருடன் செண்பகராமனுக்கு நட்பு ஏற்பட்டது. 1933-இல் வியன்னாவில் நடைபெற்ற ஓர் மாநாட்டில் சுபாஷ் சந்திரபோஸை முதன்முறையாக சந்தித்தார், செண்பகராமன். இந்திய தேசியத் தொண்டர் படை (பின் நாட்களில் இதுவே இந்திய தேசிய ராணுவமாக உருவெடுத்தது) திட்டம் பற்றி கேள்விப்பட்டிருந்த சுபாஷ் சந்திரபோஸ், தன்னுடைய இந்திய தேசியப் படை குறித்து செண்பகராமனுடன் கலந்தாலோசித்து இருக்கிறார்.

அந்த சந்திப்பின் முடிவில், தான் எப்போதும் சொல்லும் 'ஜெய் ஹிந்த்' என்ற மந்திர வார்த்தையை செண்பகராமன் உச்சரித்து இருக்கிறார். அந்த வாசகம் சுபாஷ் சந்திரபோசை வெகுவாக ஈர்த்தது. அதனையே தனது தேசியப்படையின் தாரக மந்திரமாக்கினார். அதுவே நாளடைவில் இமயம் வரையில் ஒலிக்க ஆரம்பித்தது.

செண்பகராமனைப் பற்றிய இன்னொரு சம்பவமும் இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழனின் பெருமையை உலகுக்கு பறைசாற்றூம் அந்த உன்னத சம்பவம் ஒன்று போதும்; 'தமிழன் என்று சொல்லடா-தலை நிமிர்ந்து நில்லடா’ என்ற அற்புத வரிகளின் முழுப் பொருளையும் நாம் உணர்ந்துக் கொள்ள முடியும்.
ஒருமுறை ஹிட்லர் தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது "சுதந்திரம் பெறக் கூடிய தகுதி இந்தியர்களுக்கு கிடையாது" என்று கூறினார். இந்த கருத்து அருகில் இருந்த செண்பகராமனுக்கு கடுங்கோபத்தை ஏற்படுத்தியது. "இந்தியாவின் பாரம்பரியம், இந்தியத் தலைவர்களின் திறமைகளைப் பற்றி தரக்குறைவாக நீங்கள் பேசுவதை என்னால் அனுமதிக்க முடியாது" என்று ஆவேசமாக கூறிய செண்பகராமன், சற்றும் அஞ்சாமல் அனைவரின் முன்னிலையிலும் உலகமே பார்த்து மிரண்ட சர்வாதிகாரி ஹிட்லருடன் இதுதொடர்பாக நீண்ட நேரம் விவாதித்திருக்கிறார்.

அடுக்கடுக்கான ஆதாரங்களுடனான செண்பகராமனின் வாதத் திறமையை கண்டு வியந்துப்போன ஹிட்லர், இறுதியில் பணிந்தார். தன்னை மன்னித்துக் கொள்ளும்படி அவர் கேட்க செண்பகராமனோ, வார்த்தைகளால் மன்னிப்பு கேட்பதை விட எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேளுங்கள் என்று வற்புறுத்த, ஹிட்லரும் அப்படியே செய்திருக்கிறார்.
இச்சம்பவம் நாஜிக்களுக்கு மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. செண்பகராமனை கொல்ல சதி செய்து சாப்பாட்டில் விஷத்தை வைத்து அவரை கொன்றனர். செண்பகராமன் 26-5-1934 அன்று மரணம் அடைந்தார்.

"தொட்டிலில் அழும் பிள்ளைகள் கூட ஹிட்லரின் பேரைக் கேட்டால் வாயை மூடிக்கொள்ளும்" என ஜெர்மனியில் ஒரு சொல் வழக்கு உண்டு. அப்படிப்பட்ட கொடுங்கோலனான ஹிட்லரை நேருக்கு நேராக நின்று எதிர்த்து பேசுவதென்றால் சாதாரண காரியமா?

அறிவிலும், துணிவிலும் ஈடு இணையற்ற ஓர் தமிழனாக ஜெர்மனியில் இருந்தபடி, இந்திய விடுதலைக்கு போராடிய மாவீரன் செண்பகராமனைப் பற்றி 'ஜெய் ஹிந்த்' புத்தகத்தின் வாயிலாக வரலாற்று ஆசிரியரான ரகமி, மேலும் பல அருமையாக நிகழ்ச்சிகளையும் வெளி உலகத்திற்கு தெரிவித்திருக்கிறார்.

செண்பகராமனைப் போல் வரலாறுகளில் மறைக்கப்பட்ட பல தமிழ் மாவீரர்களை நினைத்து வேதனைப்படும் முற்போக்கு சிந்தனையாளரும், பிரபல எழுத்தாளருமான தமிழச்சி என்பவர் இந்த அரிய தகவலை சமூக வலைதளம் ஒன்றில் வெளியிட்டுள்ளார்.

செண்பகராமனின் வாதத் திறமையை கண்டு வியந்துப்போன ஹிட்லர், இறுதியில் பணிந்தார். தன்னை மன்னித்துக் கொள்ளும்படி அவர் கேட்க செண்பகராமனோ, வார்த்தைகளால் மன்னிப்பு கேட்பதை விட எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேளுங்கள் என்று வற்புறுத்த, ஹிட்லரும் அப்படியே செய்திருக்கிறார்.