A+ A-

ஜூன் ௧௪(14) உலக இரத்த தான நாள் (World Blood Donars Day)

ஜூன் ௧௪(14) உலக இரத்த தான நாள் (World Blood Donars Day)

உலக ரத்த தான தினம் ஆண்டுதோறும் ஜுன் மாதம் 14ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்புடன் உலக சுகாதார நிறுவனத்தால் சர்வதேச ரீதியில் அனுஸ்டிக்கப்படுகின்றது. ரத்தப் பிரிவுகளான A, B, O ஆகிய பிரிவுகளைக் கண்டுபிடித்த கார்ல் லென்டினரின் Karl Landsteiner பிறந்த தினத்திலே இத்தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

இரத்தத்தினை நாம் பிறர்க்கு வழங்கும் பொழுது அவர்களின் உயிரினைக் காக்கும் பொருட்டு உயரிய சேவையினை செய்வதற்குச் சமம். மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்பவர் ஒரு நேரத்தில் 200 முதல் 300 வரை மி.லி. இரத்தம் தானம் செய்யலாம்.

அவ்வாறு கொடுத்த இரத்தம் நாம் உண்ணும் சாதாரண உணவில் இரண்டே வாரங்களில் மீண்டும் உற்பத்தியாகிவிடும். 3 மாதங்களுக்கு ஒரு முறை எந்த வித பாதிப்பும் இன்றி இரத்த தானம் செய்யலாம்.,

இந்த தானத்தின் மூலம் சகல வழங்குநரும் பெருநரும் இதன் பிரதிபலன்களை அவர்களுடைய வாழ்நாளிலேயே அனுபவிக்கிறார்கள். விபத்தினாலோ, யுத்த அனர்த்தங்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ அளவிற்கு அதிகமான குருதி வெளியேற்றத்தினாலும், சத்திரசிகிச்சைகளின் போது குருதி தேவைப்படுமிடத்தும் மற்றும் குருதி மாற்றுச்சிகிச்சைக்கு உட்படுத்தப்படும்போதும் குருதியை தானமாக பெறுபவர்கள் பயன் அடைகிறார்கள். குருதியின் தேவை எச்சந்தர்ப்பத்தில் தேவைப்படும் என்பதை திட்டவட்டமாகக் குறிப்பிட முடியாது.

அதேநேரம், குருதியைப் பெறுபவர் தன் உயிரை மீளப் பெற்றுக் கொள்வதினூடாக நன்மையடைவதைப் போலவே ரத்த தானம் செய்பவர்களும் மறைமுகமாக நன்மையடைகின்றார்கள். இவர்களின் சிறிய செயற்பாடு சில சந்தர்ப்பங்களில் ஒரு உயிரைக் காப்பதற்கு உதவும் மனோநிலை இவர்களிடம் வளர்கின்றது. மறுபுறமாக ரத்த தானம் செய்பவர்களின் உடலில் புதிய குருதி உற்பத்தி செய்யப்படுவதால் அவர்களும் ஆரோக்கியமான வாழ்வை அனுபவிக்கிறார்கள். இந்த உண்மையை ரத்த தானம் செய்வோர் என்ற வட்டத்திற்கு அல்லது எல்லைக்கு வெளியே இருந்து பார்ப்போர் புரிந்து கொள்வதில்லை.

உலக ரீதியில் இத்தினத்தை கொண்டாடுவதற்கான முக்கிய நோக்கம் ரத்த தானம் வழங்குபவர்களை கௌரவப்படுத்துவதற்காகவே வேண்டியாகும். உலகில் நவீன தொழில்நுட்பங்கள் எவ்வளவு தூரம் முன்னேறியபோதிலும் இரத்தத்துக்கு மாற்றீடாக வேறு எந்த ஆக்கக்கூறுகளும் கண்டறியப்படவில்லை. இரத்தம் தேவைப்படுவோருக்கு இரத்தமே வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கப்படாவிடின் நோயாளி மரணிக்கவும் கூடும்.

2009ம் ஆண்டில் இத்தினத்தின் கருப்பொருள் இரத்தம் வழங்களின் பாதுகாப்பையும், தன்னிறைவையும் செம்மைப்படுத்தி எவ்வித ஊதியமோ, வெகுமதியோ இன்றி சுயமாக தொண்டு செய்யும் நோக்குடன் ரத்த தானத்தை ஊக்குவிப்பதாகும். வருடாவருடம் பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் 81 மில்லியனுக்குக் கூடிய அலகுகளை ரத்த தானமாக வழங்கி வருகின்றனர். ஒவ்வொரு மனிதருக்கும் என்றோ ஒருநாள் இரத்தத்தின் மூலம் சிகிச்சைச் செய்ய தேவை ஏற்படலாம் என்ற அடிப்படையில் இந்த வேலைத்திட்டம் மிகவும் பயபக்தியுடன் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. அதேநேரம், உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை பிரகாரம் உலக சனத்தொகையில் ஒரு வீதத்துக்கும் குறைவானவர்களே ரத்த தானத்தை செய்கின்றனர். எல்லா நோயாளர்களுக்கும் தேவையான இரத்தம் மூலமான சிகிச்சையை உத்தரவாதப்படுத்தி வழங்க ரத்த தானம் செய்வோரின் தொகை அதிகரிக்கப்பட வேண்டுமென குறிப்பிடப்படுகின்றது.

மேலும் உலக மக்கள் வழங்கும் ரத்த தானம் ஆண்டுதோறும் 81 மில்லியன் அலகுகளுக்கும் அதிகமாக இருந்த போதிலும் இதில் 38 வீதமான பங்களிப்பினையே வளர்முக நாடுகளில் வழங்கப்படுகின்றது. ஆனால், உலக சனத்தொகையின் 82வீதமானோர் வளர்முக நாடுகளில் வாழ்கின்றனர். இந்நிலையில் இந்நாடுகள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி உலக சுகாதார நிறுவனம் மக்களுக்கு பல்வேறுபட்ட வகைகளில் புரிந்துணர்வை ஏற்படுத்த முயன்று வருகின்றது.

அன்று முதல் இன்றுவரை இன மத மொழி வேறுபாடின்றி உலகெல்லாம் வாழும் அனைத்து மக்களும் மாற்றுக்கருத்தின்றி ஏகமனதாக ஏற்றுக்கொண்ட ஒரே ஒரு தானம் ரத்த தானமாகும். ஆனால் இன்றைய விஞ்ஞான யுகத்தில் வைத்தியத்துறை அடைந்துள்ள முன்னேற்றத்தின் காரணமாக குருதிதிரவ இழைய தானம், உடல் உறுப்பு தானம் போன்ற தானங்களும் எதிர்பார்த்தளவிற்கு வெற்றியடைந்துள்ளன. இந்த வெற்றிக்குரிய முக்கியமான காரணம் தானம் செய்யும் கருணையுள்ளம் கொண்ட கொடையாளிகளின் இதயத்தில் இவையும் முக்கிய இடத்தை பிடித்துவிட்டன என்பதேயன்றி வேறு எதுவும் இல்லை.

சாதாரண எடையுள்ள ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. அதில், இருந்து வெறும் 300 முத‌ல் 350 மில்லிலீட்டர் (ஒரு யூனிட்) இரத்தம் மட்டுமே தானத்தின் போது பெறப்படும். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு இரண்டே வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும். 3 மாதங்களுக்கு ஒரு முறை எந்தவித பாதிப்பும் இன்றி இரத்த தானம் செய்யலாம். இரத்த தானம் செய்வதற்கு 5, 10 நிமிடங்கள் போதும். பொதுவாக 17 - 60 வயதுக்கிடைப்பட்ட சுகதேகிகளால் ரத்த தானம் செய்ய முடியும்.

இரத்த தானம் அளிப்பதால் நமது உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சொல்லப்போனால் நமது உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும். அது உடலுக்கு நன்மையாகத்தான் அமையும். தானமாக அளித்த இரத்த அளவை, நமது உடல் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் மீண்டும் உற்பத்தி செய்துவிடும். இரத்த தானத்தின் போது நாம் இழக்கும் சிவப்பணுக்களின் எண்ணிக்கை 56 நாட்களிலேயே சீராகிவிடும். இரத்த தானம் அளிப்பதற்கு எந்தவிதமான உணவுக் கட்டுப்பாடோ, மருந்தோ தேவையில்லை.

உடலில் இருந்து இரத்தம் எடுக்க 5 அல்லது 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஆனால் இரத்த தானம் அளித்த பிறகு 10, 15 நிமிடங்கள் ஓய்வெடுக்கச் சொல்லி பிறகுதான் அங்கிருந்து அனுப்புவார்கள். எனவே மொத்தமாகவே இரத்த தானம் அளிக்க 30 நிமிடங்கள் போதும். இரத்த தானம் அளித்த பிறகும் கூட அவரவர் தங்களது அன்றாட வேலைகளில் எப்போதும் போல் ஈடுபடலாம். எந்த சிக்கலும் இருக்காது.

இரத்த தானம் செய்வதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு வரை எந்த போதைப் பொருளையும் எடுத்திருக்கக் கூடாது. சர்க்கரை நோய், காசரோகம், எய்ட்ஸ் போன்று இரத்தத்தின் மூலம் பரவக்கூடிய நோய்கள் இருக்கக் கூடாது. மேலும் 3 ஆண்டுகளில் மஞ்சள் காமாலை நோய் தாக்கியிருக்கக் கூடாது.

உலக இரத்தான தினத்தின் பிரதான குறிக்கோள்களாக பின்வருவன அமைகின்றன:-

எந்தவொரு வெகுமதியோ அல்லது ஊதியமோ இன்றி ரத்த தானத்தை வழங்குவோருக்கு நன்றி செலுத்துதல்.

நெருக்கடியான சூழ்நிலையில் உயிர்காக்கும் விலைமதிப்பற்ற வளத்தினை ஒழுங்காக வழங்கும் அற்புதமான விசேடமான தொண்டர் அணியைச் சேர்ந்தவர் என்ற மனநிலையை ரத்த தானம் புரிவோருக்கு ஏற்படுத்துதல்.

சுகதேகியாக உள்ள நண்பர்களையும், உறவினர்களையும் எவ்வித வெகுமதியோ அல்லது ஊதியமோ இன்றி இரத்தான நடவடிக்கைகளில் பங்கேற்க ஊக்கமளித்தல்.

ஒரு குடும்ப அங்கத்தவருக்கு இரத்தம் தேவைப்பட்ட சந்தர்ப்பத்தில் ரத்த தானம் செய்தவரை தொடர்ந்தும் இத்தகைய தொண்டர் பணியில் ஈடுபட ஊக்குவித்தல்.

ரத்த தானம் செய்வோருக்கு எவ்வாறு சுகமான வாழ்வினை மேற்கொள்ள முடியும், எவ்வாறு தமது இரத்தத்தை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்பது பற்றி அறிவுறுத்துதல்.

உலக ரத்த தான இயற்கை நிகழ்ச்சிகள் பற்றிய ஆர்வத்தைத் தூண்டுதல்.

ஐக்கிய இராச்சியத்தில் பொதுமக்கள் பெருந்தன்மையுடன் ரத்த தானம் செய்கின்றார்கள் என்று அறிக்கைகள் கூறுகின்றன. இங்கிலாந்திலும், பிரேசிலிலும் நிச்சயிக்கப்பட்ட நோயாளிகளின் சிகிச்சைக்காக தேசிய இரத்த சேவை நிறுவனம் தினமும் 9000 இரத்த அலகுகளை சேகரிக்கின்றது என்றும், கடந்த வருடம் 1.3 மில்லியன் மக்களிடமிருந்து 2.3 மில்லியன் இரத்த அலகுகளை சேகரித்து வழங்கியமையினால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன என்றும் அற்றிக்கைகளில் குறிப்பிடுகின்றது.

எனவே, இது விஷயமாக நாங்கள் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளோம். ரத்த தானம் என்பது ஒரு உயிரைக் காக்க நாங்கள் வழங்கும் பங்களிப்பு. இந்த உணர்வினை இத்தினத்தில் உறுதியாக எமது மனங்களில் பதித்துக் கொள்வோம்.

இரத்த தானம் செய்வீர்!

மனிதாபிமானத்தை வளர்ப்பீர்!



சில நிகழ்வுகள் இந்நாளில் 


போக்லாந்துத் தீவுகள் - விடுதலை நாள்

ஐக்கிய அமெரிக்கா - கொடி நாள்

ஆப்கானிஸ்தான் - அன்னையர் நாள்

உலக வலைப்பதிவர் நாள்

1789 - பவுண்டி என்ற பிரித்தானியக் கப்பலின் மாலுமிகளின் கிளர்ச்சியை அடுத்து கப்பலின் தலைவனுடன் சேர்ந்து சிறிய படகொன்றில் தப்பிய 19 பேர் 7,400 கிமீ தூரம் பயணித்து திமோரை அடைந்தனர்.

1800 - நெப்போலியனின் பிரெஞ்சு இராணுவத்தினர் வடக்கு இத்தாலியில் ஆஸ்திரியர்களுடன் போரிட்டு வெற்றி பெற்று இத்தாலியை மீளவும் கைப்பற்றியது.

1807 - நெப்போலியனின் பிரெஞ்சு இராணுவத்தினர் போலந்தின் பிரீட்லாந்து என்ற இடத்தில் ரஷ்யப் படைகளுடன் மோதி வெற்றி பெற்றனர்.

1821 - வடக்கு சூடானின் சென்னார் பேரரசன் மன்னன் ஏழாம் பாடி என்பவன் ஒட்டோமான் பேரரசின் தளபதி இஸ்மயில் பாஷாவிடம் சரணடைந்ததன் மூலம் சென்னார் பேரரசு முடிவுக்கு வந்தது.

1846 - கலிபோர்னியாவின் சொனோமா என்ற இடத்தில் குடியேறிய ஆங்கிலேயர்கள் மெக்சிக்கோ மீது போரை ஆரம்பித்து கலிபோர்னியாவைக் குடியரசாக அறிவித்தனர்.

1872 - கனடாவில் தொழிற் சங்கங்கள் அதிகாரபூர்வமாக்கப்பட்டன.

1900 - ஹவாய் ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது.

1931 - பிரான்சில் சென் ஃபிலிபேர்ட் என்ற படகு மூழ்கியதில் 500 பேர் இறந்தனர்.

1940 - இரண்டாம் உலகப் போர்: பாரிசை ஜெர்மனி கைப்பற்றியது.

1940 - போலந்தின் 728 போர்க் கைதிகள் நாசிகளின் அவுஷ்விட்ஸ் வதை முகாமின் முதலாவது சிறைக்கைதிகளாக சேர்க்கப்பட்டனர்.

1941 - அனைத்து ஜெர்மனிய மற்றும் இத்தாலிய சொத்துக்களையும் ஐக்கிய அமெரிக்கா முடக்கியது.

1941 - எஸ்தோனியர்கள், லாத்வியர்கள் மற்றும் லித்துவேனிய மக்கள் பலரை சோவியத் ஒன்றியம் நாட்டை விட்டு அவர்கள் பகுதிகளை விட்டு வெளியேற்றி வதைமுகாம்களுக்கு அனுப்பியது.

1962 - ஐரோப்பிய வான் ஆராய்ச்சி மையம் பாரிசில் அமைக்கப்பட்டது.

1967 - சீனா தனது முதலாவது ஐதரசன் குண்டைச் சோதித்தது.

1967 - மரைனர் 5 விண்கலம் வீனஸ் கோளை நோக்கி ஏவப்பட்டது.

1982 - போக்லாந்து தீவுகளின் தலைநகர் ஸ்டான்லியில் நிலைகொண்டிருந்த ஆர்ஜெண்டீனப் படைகள் பிரித்தானியப் படைகளிடம் சரணடைந்ததை அடுத்து போக்லாந்து போர் முடிவுக்கு வந்தது.

1985 - TWA 847 விமானம் கிறீசில் இருந்து ரோம் செல்லுகையில் ஹெஸ்புல்லா இயக்கத்தினரால் கடத்தப்பட்டது.

1999 - தென்னாபிரிக்காவின் அதிபராக தாபோ உம்பெக்கி பதவியேற்றார்.

2002 - கராச்சியில் அமெரிக்க தூதராலயத்துக்கு முன்னர் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 12பேர் கொல்லப்பட்டு 50 பேர் காயமடைந்தனர்.

2003 - விடுதலைப் புலிகளின் வணிகக் கப்பல் ஒன்று இலங்கைக் கடற்படையினரால் தாக்கி அழிக்கப்பட்டதில் 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.

2007 - காசாப் பகுதி தமது முழுக்கட்டுப்பாட்டில் வந்திருப்பதாக ஹமாஸ் இயக்கம் அறிவித்தது.

இந்நாளில்  பிறந்தநாள் கொண்டாடும் பிரபலங்கள் 


1899 - யசுனாரி கவபட்டா, நோபல் பரிசு பெற்ற யப்பானிய எழுத்தாளர் (இ. 1972)

1929 - சே குவேரா, சோசலிசப் புரட்சியாளர் (இ. 1967)

1969 - ஸ்ரெஃபி கிராஃப், ஜெர்மனிய டென்னிஸ் வீராங்கனை

இந்நாளில் மறைந்த  பிரபலங்கள் 


1965 - கந்தமுருகேசனார், ஈழத்துப்பெரியார், மூதறிஞர் (பி. 1902)

1968 - சல்வடோரே குவாசிமோடோ, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய எழுத்தாளர் (பி. 1901)

2012 - காகா ராதாகிருஷ்ணன், பழம்பெரும் தமிழ் சினிமா நடிகர்

உலக ரத்த தான தினம் ஆண்டுதோறும் ஜுன் மாதம் 14ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்புடன் உலக சுகாதார நிறுவனத்தால் சர்வதேச ரீதியில் அனுஸ்டிக்கப்படுகின்றது. ரத்தப் பிரிவுகளான A, B, O ஆகிய பிரிவுகளைக் கண்டுபிடித்த கார்ல் லென்டினரின் Karl Landsteiner பிறந்த தினத்திலே இத்தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது. இரத்தத்தினை நாம் பிறர்க்கு வழங்கும் பொழுது அவர்களின் உயிரினைக் காக்கும் பொருட்டு உயரிய சேவையினை செய்வதற்குச் சமம். மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்பவர் ஒரு நேரத்தில் 200 முதல் 300 வரை மி.லி. இரத்தம் தானம் செய்யலாம். அவ்வாறு கொடுத்த இரத்தம் நாம் உண்ணும் சாதாரண உணவில் இரண்டே வாரங்களில் மீண்டும் உற்பத்தியாகிவிடும். 3 மாதங்களுக்கு ஒரு முறை எந்த வித பாதிப்பும் இன்றி இரத்த தானம் செய்யலாம்.,