A+ A-

ஒரு தாயின் வைராக்கியம்...!

 ஒரு தாயின் வைராக்கியம்

மருத்துவமனையில் டாக்டர் தன்னை சுற்றி உட்கார்ந்திருக்கும் ஐவரின் முகத்தை பார்த்து அவர்கள் அம்மாவின் உடல் நிலையை பற்றி சொல்ல ஆரம்பித்தார். எல்லோர் மனதிலும் ஒரே கேள்வி ? அம்மாவை இனி யார் பார்த்துக்கொள்வது ? டாகடர் உறுதியாக சொல்லி விட்டார். இனிமேல் அம்மாவுக்கு படுக்கையில்தான் எல்லாம். அம்மாவை கவனிக்க ஒரு நர்ஸ் மேற்பார்வையில் இருந்தால் குணமாக வாய்ப்பு உண்டு அதுவும் நூறு சதவிகிதம் சொல்ல முடியாது. எல்லோருக்கும் இளையவள் பானு ஏன் டாக்டர் ஹாஸ்பிடலிலேயே வச்சு பார்த்தா என்ன ? டாகடர் சிரித்தார். அது உங்கள் விருப்பம், ஆனால் நோயாளியின் கண்டிசனை சொல்லிவிட்டோம். அவர்களின் இறுதி காலத்தில் உங்களுடன் இருப்பதுதான் முறை. அதனால்தான் வீட்டுக்கு கூட்டி செல்ல சொல்கிறேன். அதற்கு மேல் உங்கள் விருப்பம். டாக்டர் எழுந்து அவர் அறையை விட்டு வெளியே அடுத்த நோயாளியை பார்க்க சென்றார்.
ஐவரில் மூத்தவரான நாராயணன், முகம் தீவிர சிந்தனையில் இருப்பது தெரிய வந்தது. அவருக்கு நாளை டெல்லியில் ஒரு முக்கியமான “கான்பரென்ஸ்” இருக்கிறது. அது அவருக்கு முக்கியம் என்ன செய்வது என்ற யோசனையில் இருந்தார். ஐவருமே வெவ்வேறு இட்த்திலிருந்து வருபவர்கள், அம்மா இவ்வளவு சீக்கிரம் படுத்து விடுவாள் என நினைக்கவில்லை. இத்தனை நாள் தனியாகத்தான் வாழ்ந்தாள். ஒரு நாள் கூட உடல்நிலை சரியில்லை என்று படுத்ததில்லை.. அவள் பெற்ற ஐவருமே இன்று நல்ல நிலையில் இருக்கிறார்கள். அவள் கணவர் இருக்கும் போதே கலயாணம் உத்தியோகம் என்று அனைத்து கடமைகளையும் முடித்து விட்டாள். கணவன் இறந்த பின்னால் ஒருவர் வீட்டுக்கும் போக விருப்பமில்லை. காரணம் ஒருவர் கூட என் வீட்டுக்கு வந்து விடு என்று கூப்பிடவெல்லாம் இல்லை. இதுவே அவள் மனதுக்கு பெரும் உறுத்தலாக இருந்த்து.
தன் இறுதி நாள் வரை யாரிடமும் போகக்கூடாது என மனதில் வைராக்கியம் வைத்துக்கொண்டாள். கணவனின் “பென்சன் பணமும்”, “இவளது பென்சன் பணமும்” அவளை தனியாக ஒரு சிறிய பிளாட்டில் தங்க வைத்தது. காலையிலும், மாலையிலும் ஒரு வேலைக்காரி வந்து வீட்டை சுத்தம் செய்து பாத்திரங்களை கழுவி வைத்து விட்டு சென்று விடுவாள். மாலை வீட்டின் முன்புறம் ஒரு உலாவல், அது முடிந்த பின் வீட்டின் பின்புறம் ஒரு நாற்காலியை போட்டு தெருவை வேடிக்கை பார்க்க உட்கார்ந்து விடுவாள்.
அவள் இருந்த வீட்டின் பின்புறம் சிறிய விளையாட்டு மைதானமும் பூங்காவும் இருந்ததால் மாலை வேளையில் அங்கு குழந்தைகளின் விளையாட்டு சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். அவர்களின் அம்மாமார்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதை இவள் வீட்டு முன்புறம் தாழ்ப்பாள் போட்டு விட்டு பின் புறம் கதவை திறந்து வைத்து பால்கனியில் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு கீழே நடப்பவைகளை பார்த்து பொழுதை போக்குவாள். வாரம் ஒரு முறை இவள் மகன்களும், மகள்களும், வந்து முகத்தை காட்டிவிட்டு அவசரமாய் கிளம்பி விடுவர்.
அப்படித்தான் ஒரு மாலை வேளையில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்து விட்டு எழப்போனவள் திடீரென்று மயக்கம் வருவது போல தலை சுற்றி கீழே விழுந்தாள். யாருக்கும் அப்பொழுது தெரியவில்லை. விளையாண்டு கொண்டிருந்த ஒரு குழந்தையின் தாய் மேலே பார்க்க முதலில் ஒரு துணி மூட்டைதான் கிடந்தது போல நினைத்தவள் உற்றுப்பார்த்தவுடன் அது ஒரு உருவம் என் தெரிந்து மற்றவர்களை அழைத்து காட்ட அங்குள்ளவர்கள் அவசரமாய் மேலேறி வந்து கதவை உடைத்து உள்ளே வந்து பால்கனியில் விழுந்து கிடந்த இவளை மருத்துவ மனையில் சேர்த்தார்கள்.அதன் பின் அவர்களின் இரண்டாம் மகன் சற்று தள்ளி ஒரு பிளாட்டில் இருப்பது தெரிந்ததால் அவருக்கு போன் செய்து வரவழைத்தார்கள்.
நாராயணன் தன் தம்பி தங்கைகளை பார்த்து நான் டெல்லி வரை அவசரமா போக வேண்டியிருக்கு, வந்தவுடன் பேசிக்கலாம், சொல்லிவிட்டு விறு விறுவென கிளம்பினார். அம்மா இப்படி கிடைக்கயில இவருக்கு அப்படி என்ன டெல்லியில வேலை ? மூன்றாவது பெண் பத்மா முணு முணுத்தாள். எங்களுக்கு மட்டும் அவசரம் இருக்காதா ? இரண்டு நாட்களாக அவர்களுக்குள் எந்த முடிவுக்கும் வர முடியவிலை. அண்ணன் வரட்டும் என்று தீர்மானத்தை ஒத்திப் போட்டு தப்பித்துக்கொண்டார்கள். ஐவரையும் வளர்த்து அனைத்தும் செய்து கொடுத்தவளை ஒரு மூன்று மாதம் அல்லது நான்கு மாதம் வைத்துக்கொள்ள அவர்களுக்கு மனமில்லை.
டெல்லியிலிருந்து திரும்பி வந்த நாராயணன் தங்கைமார்கள் இதற்குள் ஒரு முடிவெடுத்து அம்மாவை கூட்டிக்கொண்டு போயிருப்பார்கள் என முடிவு செய்திருந்தவர் இவருக்காக எந்த முடிவும் எடுக்காமல் காத்திருந்ததை பார்த்தவுடன் வந்த கோபத்தை ஹாஸ்பிடல் என்பதால் அடக்கிக்கொண்டு மேற் கொண்டு என்ன செய்வது என அவர்களுடன் கலந்தாலோசிக்க ஆரம்பித்து விட்டார்.
கடைசியாக அந்த பிளாட்டிலேயே அம்மாவை வைத்து ஒரு “ நர்ஸ்’ ஏற்பாடு செய்து கொள்ளலாம், தினமும் ஒருவர் அங்கு சென்று பார்த்துக்கொள்ளலாம் எனவும் முடிவு செய்தனர். ஆகும் செலவுகளை பங்கிட்டு கொள்ளலாம் எனறும் முடிவு செய்தனர்.
காலையில் கம்பீரமாய் இந்த ஐவரும் டாக்டரை பார்த்து அம்மாவை “ டிஸ்சார்ஜ் “ செய்து கொள்கிறோம் என்று சொல்ல, டாக்டரும்… குட்……அம்மாவை யார் வீட்டுக்கு கூட்டிட்டு போகப்போறீங்க ? அக்கறையுடன் கேட்டார்.
இவர்கள் இந்த திட்டத்தை சொன்னார்கள். அவருக்கு இவர்கள் மேல் வந்த வெறுப்புடன் ஒன்றும் பேசாமல் அந்த அம்மாள் படுத்திருந்த அறைக்குள் நுழைந்தார். மெதுவாக அம்மா, அம்மா, அவர்களின் கன்னத்தை தட்ட எந்த அசைவும் இல்லாமல் இருப்பதை பார்த்தவர் மெல்ல நாடியை தொட்டு பார்த்தார். அவர்கள் இறந்து போய் இருப்பது தெரிய வந்தது. டாக்டர் கவலையுடன் அவர்களை பார்த்து விசயத்தை சொன்னாலும், மனதுக்குள் நல்லபடியாக சேர்ந்தார்களே என்று நிம்மதியானார்.
இந்த செய்தியை கேட்ட இவர்கள் முகத்தில் கவலையை காட்டுவது போல இருந்தாலும் ஒவ்வொருவர் மனதிலும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அப்பாடி தப்பித்து விட்டோமென்று !.
எது எப்படியோ அவள் கடைசி வரை தன் வைராக்கியத்துடனே யார் வீட்டுக்கும் போகாமல் போய் சேர்ந்திருக்கிறாள்.