A+ A-

சனியின் துணைக்கிரகத்தில் குட்டி நைல் நதி: ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு

சனி கிரகத்தின் துணைக்கோளான டைட்டனில் ஆறு இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
நாசாவின் காசினி செயற்கைகோள் எடுத்து அனுப்பியுள்ள புகைப்படத்தின் மூலம் இது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து நாசாவின் ஜெட் ஆய்வகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பூமிக்கு வெளியே உள்ள கிரகத்தில் நதி இருப்பது கண்டறியப்பட்டது இதுவே முதன் முறையாகும்.
இந்த டைட்டன் கிரகத்தில் வடபகுதியிலிருந்து புறப்படும் ஆறு கிராக்கன்மரே என்ற கடலில் கலக்கிறது. இந்த கடல், பூமியில் உள்ள காஸ்பியன் கடலுக்கும் மத்திய தரைக்கடல் பகுதிக்கும் இடையிலான பகுதியின் அளவுக்கு சமமாக இருக்கிறது.
மேலும் இந்த நதி சுமார் 400 கிலோமீட்டர் நீளத்துக்கு விரிந்து இருப்பதாகவும், இதனை குட்டி நைல் நதி என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இதுமட்டுமல்லாமல் மழையின் மூலம் உருவாகும் திரவப் பொருள், ஏரிகள் மற்றும் ஆறுகள் வழியாக கடலில் கலப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
சூரியக் குடும்பத்தில் பூமிக்கு அடுத்தபடியாக டைட்டனில் மட்டுமே பரந்த கடல் பகுதி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என ஆய்வக அதிகாரி ல்டீவ் வால் தெரிவித்துள்ளார்.